நன்னிலம் அருகேயுள்ள திருமீயெச்சூர் பகுதியில் உள்ள தாமரைக் குளத்தில் மூழ்கி இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
திருமீயெச்சூர் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்தவர் தருமன் (40). மயிலாடுதுறை பகுதியில் வசித்து வரும் தருமனின் சகோதரி மகன் கௌதம் (12). பள்ளி விடுமுறைக்கு கௌதம் திருமீயெச்சூருக்கு வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை இருவரும் அதே பகுதியில் உள்ள தாமரைக்குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
குளத்தில் தருமன் குளித்துக் கொண்டிருந்தபோது கௌதமை தோளில் தூக்கிக்கொண்டு சென்றதாகவும், இதில் நிலை தடுமாறி குளத்துக்குள் மூழ்கி இருவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தருமனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்த பேரளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.