மன்னார்குடியில் தன்னை கேலி பேசிய மாணவரை ஆசிரியர் தாக்கியதில், அந்த மாணவர் காயமடைந்தார்.
மன்னார்குடி மேலவீதியில் நகராட்சி அர்பன் வங்கி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சனிக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் 10-ஆம் வகுப்பு மாணவர் வி. தர்ஷனும் (15)நின்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தை பார்த்து மாணவர்கள் கேலி செய்து, சிரித்தனராம்.
இதனால், தர்ஷனை தனியே அழைத்து சென்ற பாலசுப்பிரமணியன் ஆசிரியர்கள் ஓய்வறையில் வைத்து தாக்கினாராம். இதில், காயமடைந்த தர்ஷன், மன்னார்குடி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து, மன்னார்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.