சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களுக்கு சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை, பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.
2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்தைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தாரரின் பெயர், சுயவிபரம் மற்றும் முழு முகவரியுடன் அக்டோபர்10- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.