நன்னிலம் வட்டம், பனங்குடியில் அமைந்துள்ள மகாசக்தி வேம்படி அம்மன் கோயிலில் ஆடி மாத பால்குட உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பனங்குடி புத்தாறு வடகரையில் ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று மரங்களும் இணைந்து, ஸ்ரீ சுயம்பு மகா சக்தி வேம்படி அம்மன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் 20 -ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட உத்ஸவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (ஆக.2) கணபதி, லட்சுமி மற்றும் மாரியம்மன் ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், சனிக்கிழமை அம்பாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் மற்றும் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் அழகுக் காவடி, பால்குடம், ரதக்காவடி மற்றும் சக்தி கரகம் எடுத்து சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே வேம்படி அம்மன் கோயிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவையொட்டி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர். முத்தமிழ்ச் செல்வன் உத்தரவின்படி, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை பனங்குடி கிராமத் தலைவர் பிவிஆர். சாமிநாத அய்யர், கோயில் அர்ச்சகர் மகிழஞ்சேரி டி. ராஜேந்திரன், மாப்பிள்ளை குப்பம் சிவகுரு ராஜகணபதி சிவாச்சாரியார், நிர்வாகி ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.