மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூர் மேற்கு குடிதாங்கி ஏரியிலிருந்து விவசாயிளுக்கு விலையில்லாமல் வண்டல் மண் வழங்கும் திட்டத்தை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஏரி, குளங்களிலிருந்து விவசாயிகள் விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை மேம்படுத்திக்கொள்ள ஏரி, குளங்களிலிருந்து விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, எடமேலையூர் விவசாயிகள், மேற்கு குடிதாங்கி ஏரியிலிருந்து விவசாயப் பணிக்கு தேவையான மண்ணை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அதன்படி, மேற்கு குடிதாங்கி ஏரியிலிருந்து விவசாயப் பணிக்கு, விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தொடங்கி வைத்து, இந்த மண்ணை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தி பயன்பெற கேட்டுக்கொண்டார். அப்போது, மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ். புண்ணியக்கோட்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவிப் பொறியாளர் ரபீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.