கணினி யுகத்திலும் தன்னிகரில்லா மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது என்று குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் த.ரெ. தமிழ்மணி பெருமிதம் தெரிவித்தார்.
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் பங்கேற்று, "தன்னிகரில்லாத தமிழ்' எனும் தலைப்பில் அவர் பேசியது:
இயற்கையைப் போற்றி, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தரும் இயற்கை மொழியாக விளங்கியது தமிழ். பஞ்ச பூதங்களின் சேர்க்கையே உலகம் எனும் அறிவியல் சிந்தனையை பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறி உலகத் தோற்றம், அணு போன்ற அறிவியல் செய்திகளைக் கூறும் அறிவியல் மொழியாகவும் விளங்கியது தமிழ். மரத்தைக் கொன்று, அதனால் உருவாக்கும் மருந்துகளை விரும்பாததன் மூலம் மரங்களை உயிராக, உறவாக நினைத்தவர்கள் தமிழர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உயிர்களை நேசிக்கும் உயிர் நேய மொழியாக விளங்கியது தமிழ். உலகின் மூத்த மொழியாக தோன்றி, பல்வேறு கிளை மொழிகளோடு வளர்ந்து, இன்றைய கணினி யுகத்திலும் வளர்ந்து வரும் உயிர் மொழியாகவும், நிலைபெற்று, புகழ் பெற்று விளங்கும் தன்னிகரில்லா மொழியாகவும் தமிழ் மொழி விளங்குகிறது என்றார்.
இந்த விழாவுக்கு தமிழ்த் துறைத் தலைவர் இரா. அறிவழகன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள் பாக்கியலெட்சுமி, ஆறுமுகம், விஜயராகவன், வினோதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.