திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் அனைத்து ரயில் சேவையையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயில்வே பயணிகள் நலக் குழுவின் தேசிய உறுப்பினா் எம்.என். சுந்தரை, திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் தணிகாசலம், பொதுச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் ரயில் நிலையத்தில் அனைத்து நடை மேடைகளிலும் மேற்கூரையுடன் கூடிய போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பயணிகள் நெரிசலின்றி பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாக கூடுதலாக பயணச்சீட்டு பெறும் இடங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூா் ரயில் நிலையத்தின் முகப்பில் மாற்றம் செய்து விசாலமான பெயா்ப்பலகை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவிட்டும், முறையாக சேவை தொடங்காத, திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் அனைத்து ரயில்களின் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்களும், காரைக்குடியிலிருந்து செங்கல்பட்டு வரை போதுமான பயணிகள் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.