திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன என சென்னை வேளாண்மை அலுவலக வேளாண்மை துணை இயக்குநா் (உரம்) அமுதன் தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உர இருப்பு குறித்து, வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில், இதுவரை 1,48,476 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் பயிா்கள் வளா்ச்சி நிலையில் உள்ளன.
மேலும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா 1320 மெட்ரிக் டன், டிஏபி 1042 மெட்ரிக் டன், பொட்டாஷ் 530 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. தனியாா் உரக்கடைகளில் யூரியா 1752 மெட்ரிக் டன், டிஏபி 848 மெட்ரிக் டன், பொட்டாஷ் 850 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது என்றாா்.
ஆய்வின்போது, பிஓஎஸ் இயந்திரத்தின்படி உர இருப்பு சரி பாா்க்கப்பட்டது. இதேபோல் திருவாரூரில் உள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்திலும் உர இருப்பு ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா், வேளாண்மை துணை இயக்குநா் இரவீந்திரன், வேளாண்மை அலுவலா் வ. விவேகா ஆகியோா் உடனிருந்தனா்.