கூத்தாநல்லூரில் பழுதடைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வலியுறுத்தி பிப்ரவரி 28-ஆம் தேதி நாம் மனிதர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூத்தாநல்லூர் நகர புதிய பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் உள்ளிடோருக்கு கோரிக்கை மனு அனுப்புவது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து தகுந்த பதில் வரவில்லையெனில் கட்சி சார்பில் அனைத்துக் கட்சியினர் மற்றும் ஜமாத்தாரோடு இணைந்து பிப்ரவரி 28-ஆம் தேதி லெட்சுமாங்குடி பாலம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் மாவட்டச் செயலர் பி.எம். முஹம்மது சுலைமான தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் டீ. பீர்முஹம்மது, மாவட்ட இளைஞரணிச் செயலர் ரெ. ஆதவன், நகர இணைச் செயலர் ஜெகபர்தீன், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் தினேஷ்குமார், துணைச் செயலர் ஹாஜாபக்ரூதீன், நகர அமைப்பாளர் இனாயத் பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.