விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுப் பகுதியில் உள்ள புளிய மரத்தின் அடிப்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் பிடாரன் தெருவுக்குச் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இருந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் நடுப்பகுதியிலிருந்த புளிய மரம் சில மாதங்களுக்கு முன்பு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
அப்போது, அந்த மரத்தை முழுமையாக அகற்றாமல், அதன் அடிப்பகுதியை விட்டுவிட்டனர். தரையிலிருந்து சுமார் ஓர் அடி உயரம் உள்ள இந்த புளிய மரத்தின் அடிப்பகுதியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர் இதன் மீது மோதி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
எனவே, இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.