ஊராட்சிச் செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சிச் செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதுக்கு தமிழக அரசுக்கு நன்றி, அத்துடன் ஊராட்சிச் செயலருக்கான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சிச் செயலருக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர். சார்லஸ் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் வி. வேல்முருகன், பொருளாளர் கே. மகேந்திரன், ஊராட்சி செயலர்கள் சங்க மாநிலத் தலைவர் அ. ஜான்போஸ்கோ பிரகாஷ், திருவாரூர் மாவட்ட தலைவர் தங்கதுரை, செயலர் கலியபெருமாள், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.