திருவாரூர் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளை புனரமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகளை புனரமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் இதர அரசுத் துறைகள் வாயிலாக அமைக்கப்பட்டு, 5 ஆண்டுகள் நிறைவுற்ற பண்ணைக்குட்டைகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதிப் பெறும். அதிகபட்சமாக 1000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பண்ணைக்குட்டை யை புனரமைக்க ரூ. 12,100 பின்னிலை மானியமாக வழங்கப்படும். மேலும், உரிய முன் அனுமதி ஆணை வழங்கப்பட்ட பிறகே பண்ணைக்குட்டையை புனரமைக்க வேண்டும்.
தகுதியான பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடத்தில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று திட்டத்தில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தகுதியான விண்ணப்பங்கள் மூப்புநிலை பட்டியலின்படி மானியம் பெற பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.