திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட, காலி மதுப் புட்டிகளைச் சேகரித்து, பணம் திரட்டி, மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில அமைப்பாளரான எம்.எஸ். ஆறுமுகம் என்பவர் திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட, கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வேட்பு மனு வாங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து மனு வாங்கியுள்ளேன். இதற்கான வைப்புத் தொகை (டெபாசிட்) கட்டுவதற்காக திருவாரூர் நகர வீதிகளில் காலி மதுப் புட்டிகளை சேகரித்து வருகிறேன். அவற்றை விற்று, அதில் கிடைக்கும் பணத்தோடு, ஜன.7-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார்.