மன்னார்குடி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
பைங்காநாடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம் (55). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த க. வெற்றிவேலும் (37) வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் திருமக்கோட்டை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பாலம் என்ற பகுதியில் சென்றபோது, மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியதால், நிலைதடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த சிவானந்தம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெற்றிவேல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.