கூத்தாநல்லூரில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட குடிசை வீட்டுக்கு நிவாரணம் வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சிவதாஸ் கூறியது:
கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட கோரையாறு வடக்குத் தெருவில் அதிகாரிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இதில், கலியபெருமாள் என்பவரின் வீட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இதுவரை இவருக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் பணம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, கலியபெருமாளின் பெயர் நிவாரணப் பட்டியலில் இல்லை எனக் கூறுகிறார். கலியபெருமாளுக்கு பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வட்டாட்சியர் செல்வி கூறியது: சம்பந்தப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகுந்த ஆதாரங்களுடன் வந்தால், கணினியில் ஆய்வு செய்யப்பட்டு, எதனால் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.