தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தில்லி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தமிழகத்தில் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5 ஆண்டுகளை கடந்தும் 60 சதவீதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்த சாலைப் பணியால், பழைய சாலை பராமரிப்பின்றி மிக மோசமான நிலைக்கு உள்ளாகி, தொடர்ந்து விபத்துகள் நேரிட்டு வருகின்றன. மேலும், வாகனங்கள் பழுதடைவதும், உடல் பாதிப்பும் தொடர்கதையாகி உள்ளன.
இந்நிலையில், பழைய சாலையை தற்காலிகமாக சரி செய்யும் வகையில் ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிக பழுது பார்க்கும் பணிகள், இதுவரை இரண்டுமுறை நடைபெற்றுள்ளன.
தற்போது நடந்து வரும் பணி முறையாக நடைபெறவில்லை. இந்தியாவில் எந்த ஒரு சாலை அமைப்பு பணியும் இத்தனை ஆண்டுகள் நீடிக்கவில்லை. விவசாயிகளும், தொழிலாளர்களும், சுற்றுலா ஆன்மிகத் தலங்களும் நிரம்பியுள்ள இப்பகுதியின் சாலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே, தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.