திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் மூன்று பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பிச்சன்கோட்டகம் மேல வடபாதியை சேர்ந்தவர் மாரிமுத்து (82 ). இவர் ஜன.11-ஆம் தேதி பாண்டி - சத்திரம் செல்லும் சாலையில் மிதிவண்டியை தள்ளிக்கொண்டு சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதேபோல், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளுரைச் சேர்ந்த பெத்தான் (70) செவ்வாய்க்கிழமை வேளுர் அரசு உதவிபெறும் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அடுத்து, முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கர்ணன்(28) நண்பர் மணிபாரதியுடன் (26) இருசக்கர வாகனத்தில் பாமணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த இருவரும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கர்ணன் புதன்கிழமை உயிரிழந்தார். மணிபாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.