வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ஆம் ஆண்டு முதல்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 
2013-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம்  தேதி அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பு தேர்ச்பப்பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 200, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 600, என வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு: பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750,  பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000, உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. 
உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக் கூடாது. இருப்பினும், தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம்.  
அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.     தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்பபடிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் ஆர்விஎல் நகர், மன்னார்குடி ரோடு, விளமல் பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும். 
உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்திற்கு; மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.  அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com