புயலால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்: 34 பேர் கைது
மன்னார்குடி அருகே கஜா புயலால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு ஊராட்சியில் அரசு தொகுப்பு வீடுகளும் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. ஆனால், அரசு அலுவலர்கள் புயல் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியபோது, தொகுப்பு வீடுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த தொகுப்பு வீடுகள் இழப்பீடு பெறும் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதைக் கண்டித்தும், தொகுப்பு வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கக் கோரியும், மன்னார்குடி- திருமக்கோட்டை பிரதான சாலை கல்லுப்பட்டறை என்ற இடத்தில் த. சபாபதி என்பவர் தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், தொகுப்பு வீடுகளில் வசிப்பவர்கள் பங்கேற்று, இழப்பீடு மற்றும் புயல் நிவாரணம் கோரி கோஷமிட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 34 பேரையும் திருமக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.