தினமணி நாளிதழ், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இணைந்து திருவாரூரில் நடத்திய ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.
திருவாரூர், விளமல், மன்னார்குடி சாலையில் உள்ள பொன்தமிழ் திருமண அரங்கத்தில் இரண்டு நாள் நிகழ்வாக இந்தக் கண்காட்சி ஜூன் 29, 30- ஆம் தேதிகளில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் தஞ்சாவூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளான மீனாட்சி மருத்துவமனை, அனு மருத்துவமனை, காரைக்கால் ஓ.என்.ஜி.சி.-யின் மருத்துவ சேவைப் பிரிவு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் மெடிக்கல் சென்டர், வி.கே. ஆயுர்வேதிக் மருத்துவமனை உள்பட பல மருத்துவ நிறுவனங்கள் சார்பிலும், மருத்துவ உபகரண விற்பனை நிலையங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவைத் தவிர, திருச்சி எனர்ஜி கிங் மசாஜர், திருச்சி பவர் வேல்டு, திருவாரூர் அக்வாசேஸ், திருவாரூர் அபி டேட்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறப்புத் தள்ளுபடி விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
மருத்துவமனைகளின் அரங்குகளில் பொதுமக்களுக்குப் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. சர்க்கரை அளவை கண்டறியும் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, சளி பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை, கண் பரிசோதனை, பால்வினை நோய்கள் பரிசோதனை என பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றனர்.
பட்டிமன்றம்: சிறப்பு நிகழ்ச்சியாக மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதலே திரளான பொதுமக்கள் கண்காட்சிக்கு வருகை தந்து, அரங்குகளைப் பார்வையிட்டு, மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டனர். கண்காட்சியில் அரங்கம் அமைத்திருந்த மருத்துவ, வணிக நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் சார்பில் நினைவுப் பரிசுகள்
வழங்கப்பட்டன.
கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு தஞ்சாவூர் ராசி கேட்டரிங் நிறுவனம் சார்பில் உணவும், தஞ்சாவூர் நதி பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் நிறுவனம் சார்பில் குடிநீரும் வழங்கப்பட்டன. தங்குமிட வசதிகளை திருவாரூர் செல்வீஸ் ஹோட்டல் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் செய்திருந்தனர்.