கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு கஜா புயல் பாதிப்பு நிவாரணம் கிடைக்கவில்லையென வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டனர்.
2018 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கஜா புயலில், திருவாரூர் மாவட்டம், முசிறியம் பஞ்சாயத்துக்குள்பட்ட நாலில்ஒன்று பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பெருமாளகரம், நங்குளம் தெருவைச் சேர்ந்தவர் 15-க்கும் மேற்பட்ட திங்கள்கிழமை கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியது: கஜா புயலில் பாதிக்கப்பட்ட 20 குடிசை மற்றும் காலனி வீடுகளில் 13 வீடுகளுக்கு நிவாரணத் தொகை எங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லை. அரசு வழங்கிய 27 பொருள்கள் அடங்கிய தொகுப்பை மட்டுமே வழங்கினர். ஆனால், நிவாரணத் தொகை வழங்கும் பட்டியலில் எங்களின் 13 குடும்பங்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். இதுகுறித்து, 4 முறை இங்கு வந்து தெரிவித்து விட்டோம்.
எந்த பயனும் இல்லை என கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து முறையிட்டனர். நீண்ட நேரமாகியும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் யாரும் கண்டுகொள்ளாததால் பெருமாளகரம் மக்கள் அங்கிருந்து சென்றனர்.