நன்னிலம் பகுதியில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவைச் சேர்ந்த சிறுகுறு தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் பியூஸ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உடன் சென்றார். நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட வீதிவிடங்கன், ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம், கோவில் திருமாளம் மற்றும் பேரளம் பேரூராட்சிக்குள்பட்ட சத்திர குளம், கொரடாச்சேரி ஒன்றியம் களத்தூர், கமூகக்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட கிராமங்களில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.