ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவின் கருத்து குழப்பமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த புரிதலை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். டெல்டா பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் 13 லட்சம் பேர் உள்ளனர். சிறுகுறு விவசாயிகள் 4 லட்சம் பேர் உள்ளனர்.
ஏறக்குறைய கடந்த 8 ஆண்டுகளில் விவசாயத்திற்கு உரிய நேரத்தில் காவிரி நீரும், மழையும் உதவிடாத காரணத்தால் ரூ.11ஆயிரம் கோடி அளவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எச்.ராஜாவுக்கோ, பாஜகவுக்கோ ஏதாவது தெரியுமா? ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என சட்டப் பேரவையிலேயே அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துவிட்ட நிலையில், தேவையில்லாமல் எச். ராஜாதான் பொதுமக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றார் அவர்.