கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாகக் கண்டனம் தெரிவித்து, மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை அகற்றிவிட்டு, பாஜக ஆட்சியை கொண்டு வரும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியும்,10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கடத்தி சென்று முப்பையில் நட்சத்திர விடுதியில் சிறைவைத்திருப்பது, கோவாவில் காங்கிரஸ் ஆட்சி தொடர முடியாத அளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்து பாஜக ஆட்சி அமைக்க அக்கட்சித் தலைவர்கள் முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
பாஜகவின் இந்த செயலைக் கண்டித்தும், ராகுல் காந்தியைப் பற்றி பாஜக முன்னணி தலைவர் சுப்ரமணியம்சுவாமி அவதூறாகப் பேசியதைக் கண்டித்தும், மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலையருகே காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார்.
இதில், கட்சியின் நகரத் தலைவர் ஆர்.கனகவேல், வட்டாரத் தலைவர்கள் எஸ். செல்வராஜ் (மன்னார்குடிதெற்கு), ஜெயபால்(மன்னார்குடி வடக்கு) சமுதாயம் செல்வராசு (கோட்டூர்), சத்தியமூர்த்தி (வலங்கைமான்), மாநில பொதுக் குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், மாவட்டச் செயலர் சங்குகோபால், நகர செயலர் ஆனந்தகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.