திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,368 வழக்குகளில் ரூ.2.63 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஆர். கலைமதி தலைமை வகித்தார்.
இதில் விபத்து காப்பீடு வழக்குகள், மோட்டார் வாகன விபத்துகள், பணியாளர் தகராறு வழக்குகள், வருவாய் வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள், நில உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட 4,550 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 2,368 வழக்குகளில், ரூ. 2 கோடியே 63 லட்சத்து 39 ஆயிரத்து 600 மதிப்புக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி. விஜயகுமார், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். மோகனாம்பாள், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். கோபாலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.