திருவாரூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 211 பேரின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாவட்டத்தில் பல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை உத்தரவின்பேரில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாள்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் வாகனத் தணிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 211 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உயர்நீதி மன்ற உத்தரவை மீறி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாக 2,907 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் விபத்துகளைத் தடுக்க சாலை பயணங்களில் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை எச்சரித்துள்ளார்.