அங்கன்வாடிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 19th July 2019 12:34 AM | Last Updated : 19th July 2019 12:34 AM | அ+அ அ- |

அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு ஒப்படைப்பதைக் கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி பணியாளர்களை, துறை சார்ந்த பணி தவிர மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியத்தை வழங்க வேண்டும், பதவி உயர்வில் மேற்பார்வையாளராக செல்வோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். சாந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், மாவட்டச் செயலர் வி. சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.