மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசலில் வெள்ளிக்கிழமை வேளாண்மை நலத் திட்டங்கள் மற்றும் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், மத்திய அரசின் விவசாயிகளுக்கான நல திட்டங்கள், பயிர்க் காப்பீடு, சாகுபடி தொழில்நுட்பங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் பாரத பிரதமரின்தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து முகாமின் மூலம் மேலவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டன.
மேலவாசல் திருமுருகன் உயர்நிலைப் பள்ளி அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் தூய்மை பாரதம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சமுதாயக் கூடத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னார்குடி வேளாண்மை துறை உதவி இயக்குநர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வம், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன், கள விளம்பர உதவி அலுவலர் அருண் குமார்ஆகியோர் அரசின் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக் கூறினர். தொடர்ந்து அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.