திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீர்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணியில், நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் நீர் கட்டமைப்புகளை மீள் நிரப்புதல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளோடு வாகனங்களில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சென்றனர். பேரணியானது, மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி விளமல், பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை, தெற்கு வீதி, துர்காலயா சாலை வழியாக கஸ்தூர்பா காந்தி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.