திருவாரூர் நகராட்சி சார்பில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாக குடியிருப்பு வீடுகளில் உறிஞ்சிக் குழாய் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 300 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, மரக்கன்று நட்டு, பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு ஊரக வாழ்வாக இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், நகராட்சி ஆணையர் சங்கரன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.