மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடியில் வாங்கப்பட்டுள்ள புதிய சி.டி. ஸ்கேன் கருவியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் இயக்கி வைத்தார்.
மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துமனை வட்டார தலைமை மருத்துவனையாக இருந்த காலத்திலும், கடந்த 8 ஆண்டுக்கு முன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் சி.டி. ஸ்கேன் வசதி மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த வசதியில்லாததால் தனியார் மருத்துவனைக்கோ, தஞ்சை அல்லது திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கோ நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டதுடன் காலம், பொருள் விரையம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டு அதை பொறுத்தம் பணி நடைபெற்றது. இதையடுத்து, பொது மக்கள் பயன்பாட்டுக்காக சி.டி. ஸ்கேன் பிரிவு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு நவீன சி.டி. ஸ்கேன் கருவியை இயக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த, மாவட்ட சுகாதாரப் பயணிகள் இணை இயக்குநர் உமா, மன்னார்குடி மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் விஜயகுமார், முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெ. அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.