திருவாரூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின்கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பரிசு வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 347 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற ஆட்சியர் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து குறித்த காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை எனும் தலைப்பில் மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களுடன் பரிசுகளை ஆட்சியர் த. ஆனந்த் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.