தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நாகை மாவட்ட நிர்வாகிகள்கூட்டம் நாகையை அடுத்த புத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆறு. சரவணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நிலையில், காமேஸ்வரம் மற்றும் கீழையூர் பகுதிகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு பிறப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும், மணல் திருட்டையும் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில்அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படவுள்ளதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், பிளஸ் 2 வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை இடம் பெறச்செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.