கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த முதியோர் கடும் வெயிலில் காக்க வைக்கப்பட்டனர்.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜி. மலர்க்கொடி முன்னிலை வகித்தார். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மனுக்களைக் கொடுக்க குவிந்தனர்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் வழியிலும், படிகளிலும் நிற்கக் கூட இடமின்றி நெருக்கிக் கொண்டு நின்றனர். மேலும், அலுவலகத்தின் வெளியேயும் சுட்டெரிக்கும் வெயிலிலும், தரையில் அமர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதற்கு ஏதுவாக பந்தல் அமைத்திருக்கலாம் என்றும், குடிநீர் வசதி கூட செய்து தரவில்லை என்றும் முதியோர் புலம்பியதைக் காண முடிந்தது.