திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவையில் தற்காலிகமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை அண்மையில் தொடங்கியது. எனினும் கேட் கீப்பர்கள் பிரச்னையால், உரிய நேரத்துக்கு ரயில் சென்று சேரமுடியாமல் ஒருநாள் விட்டு, ஒருநாள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் செல்லும் நாள்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் திருவாரூரிலிருந்து காலை 8. 15-க்கு புறப்படும் ரயில் மாலை 4. 15-க்கு காரைக்குடி சென்றடையும். இதேபோல் செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் காரைக்குடியில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு செல்லும். திருச்சியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும். இந்த மாற்றங்கள் புதன்கிழமை முதல் (ஜூன் 12) நடைமுறைக்கு வருவதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.