கூத்தாநல்லூர் பகுதியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
லெட்சுமாங்குடியைச் சேர்ந்த தட்டுவண்டி ஓட்டி வரும் தொழிலாளி கண்ணன் (52). இவர், ஜூன் 11-ஆம் தேதி தட்டுவண்டி ஓட்டியவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், காயமடைந்தார். இதையடுத்து, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து கற்கோயில் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் (34) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு விபத்து: வடபாதிமங்கலம் அருகேயுள்ள வடபாதி குடியானத் தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் (38) புதன்கிழமை புனவாசல் திரௌபதை அம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதேபோல், மூலங்குடியைச் சேர்ந்த கோபி (22) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி கொண்டு ஏற்பட்ட விபத்தில், படுகாயமடைந்த சிங்காரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் கோபியும், இவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த உலகநாதன் (22) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இவர்கள், இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சிங்காரவேலுவின் சகோதரர் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.