தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் ராஜராஜசோழன் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி பொதுக் கூட்டத்தில் பேசிய, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடியில் வியாழக்கிழமை தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் பி.கே. சுரேஷ், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் அளித்த மனு விவரம்: ஜூன் 5-ஆம் தேதி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, திரைப்பட இயக்குநர் ரஞ்சித், மாமன்னன் ராஜராஜசோழனை ஜாதி வெறியர், தீண்டாமையை கடைப்பிடித்தவர், நிலங்களைஅபகரித்தவர் என எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், மாமன்னனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், அவதூறான கருத்துகளை பேசியிருப்பது தமிழர்களின் மனத்தை புண்படுத்தி இருப்பதுடன், ஜாதி மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப் பதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.