கூத்தாநல்லூரில் மணல் லாரியை பிடித்த வட்டாட்சியருக்கு மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மலர்கொடி, திங்கள்கிழமை தென்கோவனூர், தெற்குப்படுகை, கோரையாறு ஆகிய பகுதிகளில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு லாரியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் வட்டாட்சியரை பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, அங்கு நிறுத்தியிருந்த லாரியை வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் விஜய் எடுத்துக்கொண்டு கூத்தாநல்லூர் காவல் நிலையத்துக்கு சென்றபோது, வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மணல் கொள்ளையர்கள் லாரியை நிறுத்தி பெட்ரோல் செல்லும் வயரை அறுத்துவிட்டு வட்டாட்சியரையும், ஓட்டுநரையும் மிரட்டிவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் மலர்கொடி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.