இந்து முன்னணி மாநிலத் தலைவரை கைது செய்த காவல் துறையைக் கண்டித்து, புதன்கிழமை மாலை மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நிர்மலா நகரில் குடியிருக்கும் ஒரு தரப்பினர் நகரின் ஓர் இடத்தில் விநாயகர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம்.
இது தொடர்பாக இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதில் கலந்துகொள்வதற்காக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் தஞ்சைக்கு வந்த போது, அவரது காரை வழிமறித்து போலீஸார் கைது
செய்தனர்.
காவல்துறையினரின் இச்செயலைக் கண்டித்து மன்னார்குடி மேலராஜ வீதி பெரியார் சிலை அருகே இந்து முன்னணி நகரத் தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலர் பா.ராஜசேகர், நகரத் துணைத் தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகி விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.