மன்னார்குடி அருகேயுள்ள கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார்குடி காயர் கிளஸ்ட்டர் மற்றும் மேலநாகையில் செயல்பட்டு வரும் சோழநாடு காயர் பிளைபோர்ட் தனியார் நிறுவனம் சார்பில், இந்நிறுவனங்களில் பணிபுரியம் 80 தொழிலாளர்களைக் கொண்டு, பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உள்ளிக்கோட்டை, மேலதிருப்பலாக்குடி, ஆலங்கோட்டை, சம்பட்டிக்குடிக்காடு, மேலநாகை, சுந்தரக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும், உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் மன்னார்குடி ருக்மணி பாளையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும், பொதுமக்களிடமும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.