கூத்தாநல்லூர் அருகே மூன்று கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்துகொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர், தென்கோவனூர் மற்றும் கோரையாறு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு, அரசுப் பேருந்து வசதி இல்லை. இதனால், இந்த கிராமங்களிலிருந்து வேலைக்காக வெளியிடங்களுக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் கூறியதாவது:
கூத்தாநல்லூரிலிருந்து கோரையாறு, தென்கோவனூர், வடகோவனூர் ஆகிய கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. ஏற்கெனவே இப்பகுதிக்கு இயக்கப்பட்ட சிற்றுந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.தினமும் இக்கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களுக்கு சென்று வருகிறோம். பிரசவத்துக்கோ, அவசர சிகிச்சைக்கோ மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.