திருவாரூர் ஓடம்போக்கி ஆற்று பாலத்தில் நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
திருவாரூர் நகர் பகுதியில் ஓடம்போக்கி ஆறு செல்கிறது. இதன்மீதுள்ள பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதையின் ஒரு புறத்தில், காலை நேரங்களில் காய்கறிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே நடைபாதையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து, தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பாலத்தில் இருந்த வியாபாரக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் பாலத்தை எவ்வித சிரமமின்றி கடந்து செல்ல முடிகிறது. அங்கு வியாபாரம் செய்து வந்தவர்கள், தற்போது பாலம் தொடங்குமிடத்தில் சாலையோரத்தில் வியாபாரம் செய்கின்றனர். எனவே, போக்குவரத்துக்கு சிரமமின்றி வியாபாரம் செய்யும் வகையில் மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.