கஜா புயல் நிவாரணம் வழங்கல்
திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திருத்துறைப்பூண்டியில் 300-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு தார்ப்பாய், மரக்கன்றுகள் ஆகியன வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தூய அந்தோனியார் பள்ளி வளாகம், கோயில் போன்ற இடங்களில் புங்கன், மா, பலா, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வி. ஆறுமுகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் எஸ். கலியபெருமாள், செயலாளர் என். முருகேசன், கோவை லாரி பொது நல அறக்கட்டளைத் தலைவர் குமாரசாமி, செயலாளர் சி.பி. முருகேசன், பொருளாளர் பழனிசாமி, கோவை கனரக லாரி உரிமையாளர் நல அறக்கட்டளை நிர்வாகி சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.