பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி, திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் மன்றம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், கடந்த 7 ஆண்டுகளில் பொள்ளாச்சிப் பகுதியில் பணியாற்றிய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் விசாரணை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் சு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை. அருள்ராஜன் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் ஒன்றிய, நகர செயலாளர்கள் எம். நல்லசுகம், ஆர். சரவணன், வே. பாக்யராஜ்,வி.சி. கார்த்திக், சிவரஞ்சித், மாணவர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வழக்குப் பதிவு: இதற்கிடையில், பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 30 பேர், தமுமுகவைச் சேர்ந்த 60 பேர் என 90 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கண்டன சுவரொட்டி ஒட்டியவர் கைது...
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள சுவரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளரான குளிக்கரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்பவர், பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான சுவரொட்டிகளை, ஒட்டிக் கொண்டிருந்தனராம். இதையடுத்து, திருவாரூர் நகரப் போலீஸார், சண்முகசுந்தரம் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.