நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், மன்னார்குடி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனையில் வண்ணக் கோலம் இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை
நடைபெற்றது.
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், வாக்காளர்கள் வாக்களித்து தங்களின் ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் இந்த முறை 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில், மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதில், தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை வரைந்து, அதில் தேர்தலில் வாக்காளர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் ஒற்றுமையுடன் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது என எழுதப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பணியாளர்கள், சிகிச்சைப் பெற வந்த புறநோயாளிகள் என அனைவரும் வாக்காளர்களின் உரிமை கடமை என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல், மன்னார்குடியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மன்னார்குடியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரசார ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். அமுதா, கே. நிரோஷா, ஏ. மாதவி ஆகியோர் தலைமையில், மகளிர் குழுவினர் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்களர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய வண்ண கோலங்கள் போட்டு பிரசாரம் செய்தனர்.