கூத்தாநல்லூரில் புதன்கிழமை தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மோதி புகைப்படக்காரர் உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள பொதக்குடி காந்தி காலனியைச் சேர்ந்தவர் சையத் பாரூக் (40). இவர், கூத்தாநல்லூரில் புகைப்பட நிபுணராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சையத் பாரூக் மக்களவைத் தேர்தலுக்கான நிகழ்வுகளை விடியோ எடுக்க நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான அடையாள அட்டை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சம்பந்தப்பட்டவர்கள் மூலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை தேர்தல் நிகழ்வுகளை விடியோ எடுக்க வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் லெட்சுமாங்குடி நோக்கி சையத் பாரூக் சென்று கொண்டிருந்தபோது, அய்யனார் கோயில் அருகே மன்னார்குடி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தின் முன் பக்கச் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த கூத்தாநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சி. செல்வராஜ் நிகழ்விடத்துக்கு சென்று சையத்பாரூக் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் கொரடாச்சேரி அருகேயுள்ள பத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் ( 55 ) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்த சையத்பாரூக்குக்கு மும்தாஜ்பேகம் (32) மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.