திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 420 சிலைகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சுமார் 4,359 உலோக சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மற்றும் தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் உள்ள 625 கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை நீதிமன்ற உத்தரவுப்படி, தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் 2-ஆவது நாளாக புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
தொல்லியல் துறை இயக்குநர் நம்பிராஜன் மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வி, கவிதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 420 சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதுவரையில் 3,626 உலோக சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.