வங்கிகளில் கடன்பெற்ற விவசாயிகளின் விவரங்களை வெளியிடுவதற்கு தமிழக அனைத்து விவசாய சங்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி கடன் வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சட்டம் கூறுகிறது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அனைத்து நிர்வாகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வி நிறுவனங்கள், வங்கிகள் கடன் வசூல் என்ற பெயரில் மாணவர்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்துகின்றன. மேலும், வங்கிகளின் வாசல்களில் விவசாயிகளின் விவரங்களை பதாகைகள் மூலம் வெளியிட்டு, அவமதிக்கிறார்கள். இதை வன்மையாகக்கண்டிக்கிறேன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தேர்தல் அலுவலகங்களாக மாறி பொதுமக்கள் முறையிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு உடனடியாக இதில் தலையிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் வரையில், வங்கிகள் கடன் வசூல் செய்வதைத் தடுத்து நிறுத்துவதோடு, விவசாயிகளின் பெயர்களை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.