வாக்குப்பதிவு விழிப்புணர்வு: புதுமையான விநாடி- வினா போட்டி
வலங்கைமான் ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்குவளைவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில், வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுமையான முறையில் விநாடி- வினா போட்டி நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் ஓரணியாகவும், ஆசிரியர்கள் மற்றோர் அணியாகவும் பங்கேற்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் கால அளவு, அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பிரசார நேரம், தேர்தல் நடக்கும் கட்டங்கள், நட்சத்திர வேட்பாளர்கள் சார்ந்திருக்கும் தொகுதி, தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகள், விவிபாட் (வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்), நோட்டா, வாக்காளராக பதிவு செய்யும் படிவம் ஆகிய தகவல்கள் அடங்கிய கேள்விகள் கேட்கப்பட்டன. சமூக அறிவியல் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தலைமை ஆசிரியர் ஐரன் பிரபா, ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இளையராஜா, சசிகுமார், விஜயகுமாரி, ரேணுகா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்குப் பதிவு குறித்த தகவல்களை அறிந்துகொண்டனர்.