திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், வெள்ளிக்கிழமை கால்நடை அஸ்காட் திட்டத்தில் கால்நடை ஆய்வாளருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் தனபால் தலைமை வகித்தார். உதவி இயக்குநர்கள் விஜயகுமார், ஜான்சன் சார்லஸ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் ராமலிங்கம் வரவேற்றார். பயிற்சியில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஈஸ்வரன், திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள், அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
திருவாரூர் உழவர் பயிற்சி நிலைய உதவி பேராசிரியர் கதிர்செல்வன் கால்நடைகளுக்கு பரவக்கூடிய நோய்கள், அவற்றிற்கான தடுப்பூசி அளித்தல் முறைகள், தொழில்நுட்பம் குறித்து பேசினார். கொருக்கை கால்நடைப் பண்ணை துணை இயக்குநர் ஹமீதுஅலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.